தபால் துறை பணியிடங்களுக்காக சமீபத்தில் நடைபெற்ற தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெற்ற நிலையில் தற்போது தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளில் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டு தேர்வு தேதியும் வெளியிடப்பட்டுள்ளது.
தபால் துறையில் காலியாக உள்ள தபால்காரர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சமீபத்தில் தேர்வு நடைபெற்றது. தேர்விற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்று தபால் துறை அறிவித்தது. இதன்படி தேர்வும் நடைபெற்றது.
இதனிடையே, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் இந்த நடைமுறையை கடுமையாக எதிர்த்தன. பாராளுமன்றத்திலும் இப்பிரச்சனை எதிரொலித்தது. இதையடுத்து, தபால் துறை தேர்வு செய்யப்படும் என்று பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார்.
இந்நிலையில், தபால் துறையில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிற்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் ஆஜராகி தபால் துறை தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் எழுத வேண்டும் என்று கடந்த 11-ந் தேதி பிறப்பித்த உத்தரவு மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளில் தேர்வு எழுதலாம் என்று கடந்த மே 10-ந் தேதி பிறப்பித்த உத்தரவு தொடர்ந்து பின்பற்றப்படும். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஜூலை 30 ம் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கை விசாரிப்பதாக உத்தரவிட்டனர்.
இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட தபால் துறைத் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி நடைபெறும் என தபால் துறை அறிவித்துள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் அல்லது அம்மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும் என்று தபால் துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.