எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவ படிப்பு, பல் மருத்துவப் படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான நீட் நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் மே 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதற்கான விண்ணப்பப் பதிவு இணையவழியில் தற்போது தொடங்கியுள்ளது. எனவே, மாணவ, மாணவிகள் உடனடியாக நீட் தேர்வுக்கான விண்ணப்பதைப் பதிவு செய்யுமாறு கல்வியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேத, யுனானி, ஹோமியோபதிய, யோகா படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, 2024-2025-ஆம் கல்வியாண்டு சோ்க்கைக்கான நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் வரும் மே 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடங்கியது. விருப்பமுள்ள மாணவா்கள் வலைதளம் வழியாக மாா்ச் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்ப்டடுள்ளது..

நீட் தோ்வுக்கான கட்டணம் பொதுப்பிரிவுக்கு ரூ.1,700 செலுத்தவேண்டும். பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.1,600, எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு ரூ.1,000 என கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி, சேவைக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும்.
இதற்கிடையே, ஒரு மாணவா் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நீட் தகுதித் தோ்வு மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிஷம் நடைபெறும். தோ்வுக்கான முடிவுகள் ஜூன் 14-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோ்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்பட கூடுதல் தகவல்களை நீட் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் எழுந்தால் 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் வாயிலாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று நீட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக மாணவச் செல்வங்கள் நீட்தேர்வுக்கு விண்ணப்பங்களை அனுப்புமாறு கல்வியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications












