மருத்துவப் படிப்பில் சேர்வதற்காகத் தேசியத் தேர்வு முகமையின் நீட் தேர்வு நாடு முழுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாவட்டங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் மத்திய அரசு தொடர்ந்து இத்தேர்வினை நடத்த முற்பட்டு வருகிறது.
இந்நிலையில், நீட் தேர்விற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழகம் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்றுள்ள சம்பவம் இதர மாநிலங்களை வியப்படையச் செய்துள்ளது.
கடந்த ஆண்டு பின்தங்கிய தமிழகம்
கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகத்திலிருந்து 1,23,078 பேர் பங்கேற்றனர். இதில், 59,785 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 48.57 சதவிகிதம் பெற்று மாநில அளவில் 23-வது இடத்தில் தமிழகம் இருந்தது.
நடப்பு ஆண்டில் மாஸ் காட்டிய தமிழகம்
இந்நிலையில், நடப்பு 2020 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதில், தமிழகத்திலிருந்து 99,610 பேர் பங்கேற்றதில் 57.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் கடந்த ஆண்டு 23-வது இடத்திலிருந்த தமிழ்நாடு, தேர்ச்சி பட்டியலில் தற்போது 15-வது இடத்திற்கு முன்னேறி இதர மாநிலங்களை வியப்படையச் செய்துள்ளது.
சொல்லியடித்த தமிழ் மாணவன்!
இதனிடையே, இந்த நீட் தேர்வில் ஒடிசாவைச் சேர்ந்த மாணவர் சோயிப் மொத்தம் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றார். இதுவரை நீட் தேர்வில் முழு மதிப்பெண்களை யாருமே பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழக அளவில் நாமக்கல்லைச் சேர்ந்த ஶ்ரீஜன் எனும் மாணவர் நீட் தேர்வில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்திய அளவில் 8-வது இடம்
நாமக்கல்லைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் ஶ்ரீஜன் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 710 பெற்றுள்ளார். மேலும், இந்திய அளவில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 8-வது இடத்தைப் பிடித்து பெருமை சேர்த்துள்ளார்.
தமிழக மாணவர்களே முதலிடம்
மேலும், இந்த ஆண்டு இந்திய அளவில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களே நீட் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த ஜீவித்குமார் எனும் மாணவர்கள் நீட் தேர்வில் 664 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், இவரது தந்தை நாராயணசாமி, ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வில் சாதிக்கும் தமிழகம்
தமிழகத்தில் பொறுத்தவரையில், மாணவி மோகன பிரபா 2வது இடம் பிடித்துள்ளார். நடப்பு ஆண்டு நீட் தேர்வுக்கு மொத்தம் 1.21 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 99,610 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 57,215 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.