நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் நேர வேண்டும் எனில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். இந்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் 13ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், கடந்த ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வைப் போலவே இந்த ஆண்டிலும் ஆடை, செப்பல், காதணிகள் என பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த விபரங்களைக் காணலாம் வாங்க.
2020 நீட் தேர்வு!
நடப்பாண்டில் நீட் தேர்வை எழுதுவதற்காக நாடு முழுவதும் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், தமிழகத்தில் மட்டும் 1,17,990 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக நகரங்கள்!
இந்தியா முழுவதும் உள்ள 155 நகரங்களில் வரும் செப்டம்பர் 15 (ஞாயிறன்று) நீட் தேர்வு நடைபெறவுள்ளது. இவற்றில், தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற உள்ளது.
தமிழில் தேர்வு எழுதுவோருக்கு!
தமிழ், மலையாளம், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, ஒடிசா, வங்காளம், உருது, இந்தி ஆகிய 11 மொழிகளில் இத்தேர்வு நடைபெறவுள்ளது. இதில் ஆங்கிலம், இந்தி, உருது மொழிகளில் மட்டும் அனைத்து நகரங்களிலும் தேர்வு நடைபெறும். தமிழ் மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளவர்களுக்குத் தமிழகத்திலேயே மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு நேரம்!
செப்டம்பர் 13ம் தேதியன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெறும். கடந்த ஆண்டு மதியம் 1.30 மணிக்கு மேல் தேர்வு மையத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, இந்த ஆண்டு தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் 1.15 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் சென்று அவரவர் இருக்கையில் அமர்வது நல்லது.
நுழைவுச் சீட்டு!
விண்ணப்பதாரர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியே இருக்கைகள் ஒதுக்கப்பட்டு, அதில் அவர்களின் தேர்வு பதிவு எண் ஒட்டப்பட்டு இருக்கும். 1.30 மணி முதல் 1.45 மணி வரை தேர்வு குறித்த முக்கிய நடைமுறைகள் அறிவித்தல் மற்றும் ஹால் டிக்கெட் பரிசோதனை நடைபெறும். ஹால் டிக்கெட் இல்லாதவர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். 1.45 மணிக்கு விடைத்தாள் தொகுப்பு தரப்படும். 1.50 மணி முதல் 2 மணி வரை தங்களைப் பற்றிய தகவல்களை விடைத்தாள் தொகுப்பில் பதிவு செய்ய வேண்டும்.
ஆள் மாறாட்டம்!
விடைத்தாளில் 2 மணி முதல் 5 மணி வரை விடைகளை எழுத அனுமதிக்கப்படுவர். 5 மணிக்கு முன்னதாக தேர்வர்கள் தேர்வு அறையைவிட்டு வெளியேற அனுமதி இல்லை. மேலும், ஆள் மாறாட்டத்தைத் தடுக்கும் வகையில் வருகைப் பதிவுத் தாளில் மாணவர்கள் தங்களது கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும்.
இதற்கெல்லாம் அனுமதி இல்லை!
தேர்வு மையத்தின் உள்ளே மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், ஜியோ மெட்ரிக்பாக்ஸ், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கைப்பேசி, புளூடூத், கை கடிகாரம், பென்டிரைவ், காதணிகள், வளையல் போன்ற ஆபரணங்களுக்கும் கடந்த ஆண்டைப் போல அனுமதி இல்லை.
சட்டை கிழிந்திடும்..!
நீட் தேர்வு எழுத வருவோர் மென்மையான நிறத்திலேயே ஆடை அணிந்திருக்க வேண்டும். அரைக்கை சட்டைக்கு மட்டுமே அனுமதி உண்டு. முழுக்கை சட்டை அணிந்து வருவோரின் சட்டை கடந்த ஆண்டைப் போலவே கிழித்து அனுமதிக்கப்படுவர். மதம் சார்பான அதிகம் உடல் மறைக்கும் ஆடைகள் அணிபவர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக தேர்வு அறைக்கு வந்து ஆசிரியைகளின் சோதனைக்கு உட்பட வேண்டும். மேலும், தேர்வு மையத்துக்குள் ஷு அணியக்கூடாது. செருப்பு மட்டும் அனுமதிக்கப்படும். அதுவும் ஹைஹீல்ஸ் உள்ளதாக இருக்கக்கூடாது.
கொரோனா தடுப்பு கட்டுப்பாடு
தற்போது கொரோனா தொற்று பரவல் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் 50 மில்லி அளவில் சானிடைசர், உள்பக்கம் தெளிவாகத் தெரியும் வகையில் தண்ணீர் பாட்டில், முகக் கவசம், கையுறை, மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான சான்றிதழ் உள்ளிட்டவற்றை எடுத்து வர வேண்டும்.
முகக் கவசத்தில் நோ பிட்டு
மேலும், தேர்வில் நடைபெறும் குளறுபடிகளைத் தவிர்க்கும் வகையில் தேர்வு மையத்திலேயே மாணவர்களுக்குப் புதிய முகக் கவசம் வழங்கப்பட உள்ளது. ஏற்கெனவே மாணவர்கள் அணிந்து வரும் முகக் கவசத்தைக் கழற்றிவிட்டு, தேர்வு அறையில் வழங்கப்படும் முகக்கவசத்தை அணிய வேண்டியது அவசியம்.