பல்வேறு மாநிலங்களின் கோரிக்கையை அடுத்து முதுநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு கட் ஆப் மதிப்பெண்னை 6 சதவிகிதம் குறைக்கவுள்ளதாக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மருத்துவ பட்ட மேற்படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., மற்றும் எம்டிஎஸ் (பல் மருத்துவம்) உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்பிற்கும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நடைமுறையின்படி, முதுநிலை மருத்துவப்படிப்பில் சேர வேண்டுமென்றால், குறைந்தபட்சம் பொதுப் பிரிவினர் 44 சதவிகிதம், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினர் 34 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றாக வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 39 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் கட் ஆப் மதிப்பெண்களைக் குறைக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் சில மாநிலங்களின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, 6 சதவிகிதம் கட் ஆப் மதிப்பெண்னை குறைத்துக்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக தேர்வு வாரியம், இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்வாகிகளுடன் மத்திய சுகாதார நல அமைச்சகம் ஆலோனை நடத்தியது. அதன்பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டிலிருந்து (2019- 20) இந்த புதிய கட் ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.