மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் நடக்கவிருந்த நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே தற்போது மீண்டும் அந்தத் தேர்வு செப்டம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயம். அகில இந்திய நுழைவுத் தேர்வான இது கடந்த மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அந்தத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
இந்த நீட் தேர்வில் பங்கேற்க நாடு முழுவதுமிருந்து 16 லட்சம் மாணவ மாணவியரும், குறிப்பாக தமிழகத்தில் சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்துள்ளனர். இருப்பினும், பொது ஊரடங்கு நீடித்து வருவதாலும், கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் மேற்கண்ட அறிவிப்பின்படி நீட் தேர்வை மே மாதம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நீட் தேர்வு ஜூலை மாதம் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், தேர்வு நடத்துவதற்கான சூழ்நிலை தற்போது வரை திரும்பாத நிலையில், நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், மாணவர்கள் நலன் கருதி நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. ஜேஇஇ முதன்மை தேர்வு செப்டம்பர் 1ம் தேதியிலிருந்து 6ம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27ம் தேதியும், நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும் நடைபெறும் என அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












