இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வரும் ஜனவரி 15ம் தேதி முதல் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், யுனானி, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தோ்வு வரும் மே மாதம் 3-ம் தேதியன்று நடைபெற உள்ளது.
முன்னதாக, இத்தேர்விற்கான விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31-ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இதனிடையே, மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அந்த அவகாசம் ஜனவரி 6-ஆம் தேதியில் வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த கால கட்டத்தில் தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் பேரும், நாடு முழுவதும் 16 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது, விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அதனை வரும் 15-ஆம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் ஜனவரி 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.