முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) வரும் ஜனவரி 5ம் தேதியன்று நடைபெறவுள்ள நிலையில் இதில், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும், பட்டய மேற்படிப்புகளுக்கும் 30,000 அதிகமான இடங்கள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் சுமார் 3 ஆயிரம் இடங்கள் உள்ளது.
இந்த இடங்கள், தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வின் (நீட்) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி எதிர்வரும் 2020 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஜனவரி 5-ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்த விண்ணப்பப் பதிவில் எம்பிபிஎஸ் பயின்ற மருத்துவர்கள் 1.5 லட்சம் போ் நாடு முழுவதும் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களுக்காக விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதில், தமிழகத்தில் மட்டும் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், வரும் ஜனவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்காகத் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் உள்ளிட்டு நாடு முழுவதும் 162 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான முடிவுகள் 2020 ஜனவரி 31-ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.