மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நுழைவுச் சீட்டில் தேதி மாறி குறிப்பிடப்பட்டிருந்ததால் இதற்கு விண்ணப்பித்திருந்த மாணவர்கள் குழப்பமடைந்தனர். பின், சிறிது நேரத்திற்குப் பிறகு தவறு திருத்தப்பட்டு இணையதளத்தில் சரியான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டன.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) வரும் மே மாதம் 5-ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. தேசிய தேர்வுகள் முகமை சார்பில் நடைபெறவுள்ள ,இத்தேர்வில் பங்கேற்பதற்கு சுமார் 15 லட்சத்து 19 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் கடந்த திங்களன்று வெளியிடப்பட்டது. இதில், ஹால்டிக்கெட்டில் தேர்வு தேதி 05.05.2019 என்பதற்குப் பதிலாக, 15.04.2019 என இருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து, மாணவர்கள் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக புகார் அளித்ததைத் தொடர்ந்து, தவறு சரிசெய்யப்பட்டுச் சரியான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து மாணவர்களிடம் நிலவிய குழப்பம் முடிவுக்கு வந்தது.