பி.ஆர்க் படிப்புக்காக நடத்தப்படும் ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தமிழக மாணவர் ஆர்.முத்து தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதித்துள்ளார். தேர்வு முடிவுகளை https://jeemain.nta.ac.in/ என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.
ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடத்தப்பட்டு வருகிறது.
இதில் முதன்மைத் தேர்வானது, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வு கடந்த ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடத்தப்பட்டது.

இதில் பி.ஆர்க், பி.பிளானிங் ஆகிய படிப்புகளுக்கான 2-ம் தாள் தேர்வு ஜனவரி 24-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 55,608 மாணவ, மாணவிகள் எழுதினர். அதற்கான தேர்வு முடிவுகள் https://jeemain.nta.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியானது. இத்தேர்வில் தமிழக மாணவர் ஆர்.முத்து (பி.ஆர்க்), ஆந்திராவைச் சேர்ந்த கோலாசானி சாகேத் பிரணவ் (பி.பிளானிங்) ஆகியோர் முழு மதிப்பெண்களை எடுத்து தேசிய அளவில் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தைக் கிளிக் செய்து அறியலாம். அடுத்தகட்டமாக ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு ஏப்ரல் 4 முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












