தமிழ்நாடு முழுவதும் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று(மே.8) வெளியானது. இதில், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று, சாதித்துள்ளனர். அப்படி என்ன தான் விஷேசம் என்பதை, கீழே உள்ள கட்டுரை வாயிலாக அறிந்து கொள்வோம்?
தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், பரந்தூர் சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய, விவசாய குடும்பங்களை சேர்ந்த 81 மாணவ, மாணவிகள், பிளஸ் டூ வகுப்பில் நான்கு பாடப் பிரிவுகளில் கல்வி பயின்று வருகின்றனர்.

பரந்தூர் சுற்று வட்டார கிராமங்களை உள்ளடக்கிய பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க அறிவிப்பு வெளியான நாள் முதல், அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டங்களால், அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் கல்வி கேள்விக்குறியாகி விடுமோ என்ற அச்சம் நிலவி வந்தது. இந்நிலையில், பரந்தூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த 81 மாணவ, மாணவிகளும் படிப்பில் இருந்து கவனத்தை திசை திருப்பாமல், பாடம் கற்பித்த ஆசிரியர்களின் வழிகாட்டுதல்படி படித்து, பிளஸ் டூ தேர்வை எழுதி முடித்தனர்.
தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற ஒரே அரசு மேல்நிலைப்பள்ளி எனும் பெருமையை பெற்று, பள்ளியில் 45 மாணவிகள், 36 மாணவர்கள், என கல்வி பயின்ற 81 பேரும் அதிக அளவில் மதிப்பெண்கள் பெற்று, முழு அளவில் தேர்ச்சியை தங்களுக்கு உரித்தாக்கியுள்ளனர்.
என்னது நுாறு சதவீத தேர்ச்சி
வணிகவியல் பாடத்தில் 6 பேரும், கணக்குப்பதிவியல் பாடத்தில் ஒருவரும், வரலாறு பாடத்தில் 2 பேரும், பொருளியல் பாடத்தில் ஒருவர் என, நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
குறிப்பாக பள்ளியில் படித்து வந்த மாணவன் ஒருவர் 553 மதிப்பெண் பெற்று பள்ளியிலே முதலிடம் பெற்றுள்ளார். அந்த மாணவன் வணிகவியல் கணக்குப்பதிவியல் மற்றும் பொருளியல் ஆகிய மூன்று பாகங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற ஒரே அரசு மேல்நிலைப்பள்ளி எனும் பெருமையை, பரந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றுள்ளது. இதையடுத்து, அப்பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மாவட்ட முடிவுகள்
இங்கு தேர்வு எழுதிய மாணவ மற்றும் மாணவிகளின் எண்ணிக்கை 13,141. இதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 11,935 . தேர்ச்சி சதவீதம் 90.82
தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை-6,429,தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை - 5,561, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் - 86.50. தேர்வு எழுதிய மாணவிகளின் எண்ணிக்கை - 6,712,தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை - 6374, தேர்ச்சி விகிதம் 94.96
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 48 பள்ளி. 6847 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், தேர்ச்சி பெற்றவர்கள்- 5920, தேர்ச்சி விகிதம் 86.46.
பின் தங்கிய மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம், 31 வது இடத்தை பிடித்துள்ளது. மாநில அளவில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையிலும், காஞ்சிபுரம் மாவட்டம் 31 வது தர வரிசை பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு மாநில அளவில் மாவட்டத்தின் தரம் 28 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 31 ஆக குறைந்துள்ளது. கடந்தாண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சி அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டம் 27-வது இடத்தில் இருந்து 31-வது இடத்திற்கு சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












