கொரோனா தொற்று காலத்தில் ஜேஇஇ, நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இன்று ஜேஇஇ முதன்மைத் தேர்வு தொடங்குகிறது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதன்படி, நீட், ஜேஇஇ தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான புதிய அட்டவணையைத் தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்ட நிலையில், கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் இந்தக் காலத்தில் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இருப்பினும், மத்திய அரசு தொடர்ந்து இந்த தேர்வுகளை நடத்த தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, நாடு முழுவதும் ஜேஇஇ மெயின் தேர்வு இன்று (செப்டம்பர் 1) தொடங்கி வரும் 6ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இதில், நாடு முழுவதும் 660 மையங்களில் 9,53,473 மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கேற்கவுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 34 மையங்களில் 53,765 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று முதல் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், மாணவ- மாணவிகள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணிந்தும், சானிடைசர் உள்ளிட்டவற்றையும் கொண்டு சென்றனர். இருப்பினும், முழு உடல் சோதனைக்குப் பிறகே அவர்கள் தேர்வு எழுதும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.