என்ஐடி, ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ.) அறிவிப்பினை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன் லைனில் பதிவு செப்டம்பர் 3ம் தேதி (இன்று) முதல் தொடங்கப்பட உள்ளது.
என்ஐடி, ஐஐடி, சிஎப்டி, மற்றும் ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள இளநிலை பி.டெக்., படிப்புகளில் சேர்வதற்கு ஜே.இ.இ. முதல் நிலைத் தேர்வு மற்றும் முக்கியத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சிபெறுபவர்கள் என்ஐடி, ஐ.ஐ.ஐ.டி.. சி.எஃப்.டி. ஆகிய கல்வி நிறுவனங்களில் சேரலாம். இத்தேர்வில் தகுதி பெற்று, முக்கியத் தேர்விலும் தகுதி பெறுபவர்கள் ஐஐடி, ஐஐஎஸ்சி-க்கான உயர் கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.
முதல்நிலைத் தேர்வானது என்டிஏ சார்பில் வருடத்திற்கு இருமுறை நடத்தப்படுவது வழக்கம். அதாவது ஜனவரி மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் நடத்தப்படும். ஜனவரி மாத முதல்நிலைத் தேர்வில் போதிய மதிப்பெண் பெறாதவர்கள் ஏப்ரலில் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வில் பங்கேற்கலாம்.
இந்த இரண்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண் எதுவோ அதை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இரண்டு தேர்வுகளுக்குப் பிறகே ஜே.இ.இ. பிரதானத் தேர்வு நடத்தப்படும்.
தற்போது ஜனவரி மாத முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை என்.டி.ஏ. வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து இன்று முதல் (செப்டம்பர் 3) ஜேஇஇ முதல்நிலைத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தான மேலும் விபரங்களை அறிய விரும்புவோர் http://nta.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே கிளிக் செய்யவும்.