ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பி.இ, பிடெக் உள்ளிட்ட துறைகளில் சேர ஜெஇஇ நுழைவுத் தேர்வு கட்டாயம். இது, ஜெஇஇ மெயின், ஜெஇஇ அட்வான்ஸ்டு என இரு பிரிவுகளை உள்ளடக்கியது. இதில், மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அட்வான்ஸ்டு தேர்வினை எழுத முடியும்.
கடந்த ஆண்டு வரையில் ஜெஇஇ நுழைவுத் தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வந்தது. ஆனால், நடப்பு கல்வி ஆண்டு முதல் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை அமைப்பு இத்தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. முதல் தேர்வு வரும் ஜனவரி மாதத்திலும், 2-வது தேர்வு ஏப்ரல் மாதத்திலும் நடத்தப்படுகிறது.
இத்தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் பெற்று வந்த நிலையில் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க வரும் செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளாகும்.
ஜெஇஇ தேர்வெழுத விரும்பும் 12ம் வகுப்பு மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nta.ac.in என்ற தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தை பயன்படுத்தி வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கட்டணம், தேர்வு மையம் உள்ளிட்ட முழு தகவல்களும் இந்த இணையதளத்தில் காணலாம்.