சென்னை: இந்திய பொறியியல் பணி தேர்வுக்கான அறிவிப்பை மத்திய பொதுத் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 27-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அரசில் ஐஏஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளைப் போன்று இந்திய பொருளாதார பணி (ஐஇஎஸ்), இந்தியன் ஸ்டேஸ்டிக்கல் சர்வீஸ் (ஐஎஸ்எஸ்), இந்திய பொறியியல் பணி (ஐஇஎஸ்.) என வேறு சில அகில இந்திய பணிகளும் உள்ளன. ஐஏஎஸ் தேர்வை அனைத்து பட்டதாரிகளும் எழுதலாம் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும். ஆனால், ஐ.இ.எஸ், ஐ.எஸ்.எஸ் ஆகிய தேர்வுகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே எழுதுவதற்கு விண்ணப்பிக்க முடியும். மேற்கண்ட அனைத்துத் தேர்வுகளையும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்தான்(யுபிஎஸ்சி) நடத்துகிறது.
ஐஇஎஸ் பிரிவில் மொத்தம் 602 காலியிடங்கள் உள்ளன.
வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இதில் இந்தியன் ரயில்வே சர்வீசஸ், மிலிட்டரி என்ஜினீயரிங் சர்வீஸ், இந்தியன் டெலிகாம் சர்வீசஸ், இந்தியன் நேவல் ஆர்மமேன்ட் சர்வீஸ், இந்தியன் ரயில்வே ஸ்டோர் சர்வீஸ் என பலவிதமான பதவிகள் உள்ளன.
விண்ணப்பதாரரின் விருப்பம், மதிப்பெண், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட பணிகள் ஒதுக்கப்படும்.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 25 கடைசி தேதி ஆகும்.
கூடுதல் விவரங்களைப் பெற http://upsc.gov.in/exams/notifications/2016/Engg_2016/English_Notice_ESE_2016.pdf என்ற இணையதளத்தை கிளிக் செய்யலாம்.