வேளாண் படிப்பில் சேர்வதற்கான ICAR சார்பில் நடைபெறும் AIEEA என்னும் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டியது அவசியம். அதன்படி, ஏஐஇஇஏ தேர்வு மூலம் வேளாண் துறை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய வேளாண் ஆய்வு கவுன்சில் (Indian Council of Agricultural Research) மற்றும் தேசிய தேர்வுகள் முகவாண்மை ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் 75 வேளாண் மற்றும் கால்நடை பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை நடத்துகின்றன.
இதில், இளநிலை பட்டப்படிப்புகளில் சேர AIEEA UG மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர AIEEA PG என்னும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்துடன் ஆய்வு மாணவர்களுக்காக AICE- JRF/SRF தேர்வும் நடைபெறுகிறது.
நடப்பு ஆண்டில் இத்தேர்வு முடிவுகள் அடிப்படையில் மூன்று கட்டங்களாகக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. முதல் கட்ட கலந்தாய்வு இன்று ஆரம்பித்துள்ளது. ஜூலை 30ஆம் தேதி (நாளை) இரவு 11.59 மணிக்குள் மாணவர்கள் தங்கள் விருப்பமான கல்லூரியை ஆன்லைனில் தேர்வு செய்ய வேண்டும். ஒரே ஒரு முறை மட்டும் தங்கள் தேர்வை மாற்றிக்கொள்ளலாம். ஆகஸ்ட் 1ஆம் தேதி மாலை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகள் பற்றிய விபரம் வெளியாகும்.
முதல் கட்டக் கலந்தாய்வில் கல்லூரிகள் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதிக்குள் அந்தந்த கல்லூரிகளுக்குச் சென்று தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து உரிய கட்டணத்தையும் செலுத்தி சேர்ந்துகொள்ள வேண்டும்.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது கலந்தாய்வின் முடிவுகள் ஆகஸ்ட் 8ஆம் தேதியும், மூன்றாம் கலந்தாய்வு முடிவுகள் 17ஆம் தேதியும் வெளியிடப்படும்.