கொரோனா நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், பல முக்கியத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கேட் 2021தேர்வில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - பம்பாய் (IIT-B) கடந்த ஜூலை 25ம் தேதியன்று பொறியியல் பட்டதாரி திறனுக்கான சோதனைத் தேர்வு 2021 (GATE) தேதிகளை வெளியிட்டது. அதன்படி, பொறியியல் முதுகலை சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகள் 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதியன்று தொடங்கி பிப்ரவரி 14 ஆம் தேதி வரையில் நடத்தப்பட உள்ளது.
முன்னதாக, கொரோனா தொற்றினால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வரும் இச்சூழ்நிலையினை கருத்தில் கொண்டு GATE-2021 தேர்வுகளை நீண்ட காலத்திற்கு நடத்திட முடிவு செய்யப்பட்டு அதன்படியே, பிப்ரவரி 5, 6, 7, 12, 13, மற்றும் 14 ஆகிய தேதிகளில் கேட் தேர்வுகளை நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, கேட் 2021 தேர்வு தேதிகள் மட்டுமின்றி மேலும் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றில், இத்தேர்வில் அதிக மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் பல தகுதிகள் தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களின் படி, Humanities பாடப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் GATE தேர்வில் அனுமதிக்கப்படுவர். சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட புதிய பாடப் பிரிவுகளும் தேர்வுகளுக்கு சேர்க்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு புதிய பாடப் பிரிவுகளைச் சேர்த்ததின் மூலம் GATE 2021-க்கான மொத்த பாடப் பிரிவுகளின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இத்தேர்வில் மூன்றாம் ஆண்டு மாணவர்களும் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.