சென்னை: வங்கிகள், ரயில்வே உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையை அடுத்த ஈக்காட்டுத்தாங்கல் பாலாஜி நகரில் உள்ள தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளை அலுவலகத்தில் இந்த இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்தப் பயிற்சித் திட்டத்தை ரோட்டரி சங்கத்தின் மண்டல ரோட்டரி சங்க கவர்னர் சி.ஆர்.ராஜூ அண்மையில் தொடக்கி வைத்தார்.
இதுதொடர்பாக அறக்கட்டளையின் தலைவர் சிம்மச்சந்திரன் கூறியது:
இந்த மையத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை காலை 10 முதல் மாலை 5 மணி வரை ஆங்கிலம், தமிழ் அடிப்படை கணினி பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
மாற்றுத்திறனாளிகள், ஏழை மாணவர்கள், பெற்றோரை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்டோர், விதவைகள் போன்றவர்களும் இந்தப் பயிற்சியில் பங்கேற்று பயன் பெறலாம். www.tndfctrust.com என்ற இணையதளத்திலும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள கூட்டமைப்பின் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
பயிற்சி மையத்துக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் Tamilnadu differently Abled Federation Charitable Trust என்ற பெயருக்கு எண்.10, 4வது குறுக்கு தெரு, பாலாஜி நகர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032 என்ற முகவரிக்கு பணமாகவோ, வங்கி வரைவோலையாகவோ அனுப்பி வைக்கலாம். மேலும் தொடர்புக்கு 044-22251584 என்றார் அவர்.