சென்னை: பிளஸ்டூ தேர்வில் காப்பி அடிப்பதில் தமிழகத்திலேயே கடலூர், வேலூர் மாவட்டங்கள்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளன. இந்த இரு மாவட்டங்களில்தான் அதிக அளவிலான மாணவர்கள், காப்பி அடித்து பிடிபட்டுள்ளனர்.
இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்வு ஒரு வழியாக நடைபெற்று முடிந்துள்ளது. வழக்கம் போல இந்த ஆண்டும் பலர் காப்பி அடித்து மாட்டி தங்களது எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளனர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவிலான பறக்கும் படையினர் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
8 லட்சத்திற்கும் மேற்பட்டோர்
நடப்பு ஆண்டு பிளஸ்-2 தேர்வை இந்த ஆண்டு 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதியுள்ளனர். பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ம் தேதி தமிழ் முதல் தாளுடன் தொடங்கி, மார்ச் 31-ம் தேதி முடிவடைந்தது.
காப்பி அடித்த மாணவர்கள்
பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் பிட் அடிப்பதை தடுக்கவும், கண்டுபிடிக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டு, அனைத்து தேர்வு மையங்களிலும் ஆய்வு செய்தபோது பிட் அடித்த மாணவர்கள் பிடிபட்டனர்.
தமிழில் பிட் அடித்த 16 பேர்
இதில் தமிழ் முதல் தாளில் 5 மாணவர்கள் பிடிபட்டனர். அதுபோல், தமிழ் இரண்டாம் தாளில் 11 பேர் பிடிப்பட்டுள்ளனர்.
ஆங்கில "காப்பி ரைட்டர்"கள்... 51!
அதேபோல தமிழக அளவில் ஆங்கிலம் முதல் தாளில் 36 பேர், இரண்டாம் தாளில் 15 பேர் காப்பி அடித்து சிக்கியுள்ளனர்.
கணக்கில் 20... கணக்குப் பதிவியலில் 67
கணக்கில் 20 பேர், இயற்பியல், வணிகவியல் பாடத்தில் மொத்தம் 46 பேர், வேதியியல், கணக்கு பதிவியல் பாடத்தில் 67 பேர் காப்பி அடித்துள்ளனர்.
பொருளாதாரத்தில் 63
பொருளாதாரத்தில் 63 பேர், உயிரியல், தாவரவியல், வரலாறு பாடங்களில் 33 பேர், பிட் அடித்து பிடிப்பட்டுள்ளனர். மொத்தத்தில் காப்பி அடித்தது, பிட் அடித்தது போன்ற செயல்களில் ஈடுபட்டு 356 பேர் பிடிப்பட்டுள்ளனர்.
கடலூரில் 81.. வேலூரில் 81
இதில் கடலூர் மாவட்டத்தில் 81 பேரும், வேலூர் மாவட்டத்தில் 81 பேரும் பிட் அடித்து மாட்டியுள்ளனர். பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இங்குதான் அதிகமாகும்.
விழுப்புரத்திற்கு 2வது இடம்
விழுப்புரம் மாவட்டத்தில் 43 பேர் பிட் அடித்து மாட்டி 2வது இடத்தை பிடித்துள்ளனர். மாணவர்களின் இந்த நிலைக்கு யார் காரணம், என்ன காரணம் என்பதை கல்வித்துறையினர் கண்டறிந்து பாடம் நடத்துவது, மாணவர்களை படிக்க வைப்பது போன்றவற்றில் மலர்ச்சியை ஏற்படுத்த முயல வேண்டும்.


Click it and Unblock the Notifications












