மத்திய அரசின் கீழ் செயல்படும் சிபிஎஸ்இ, கேந்திர வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு முடிவுகள் இம்மாதம் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த 7-ஆம் தேதியன்று சிபிஎஸ்இ சார்பில் நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் இருந்து சுமார் 16 லட்சத்து 91 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்றனர். கடந்த ஆண்டு வரை இந்த தேர்வுகளின் விடைக் குறிப்புகள் தேர்வு நடந்த 10 நாள்களுக்குள் வெளியிடப்படும்.
இதனிடையே, இந்த ஆண்டு கடந்த 7-ஆம் தேதி நடந்த தகுதித் தேர்வின் விடைக் குறிப்புகள் தற்போது வரை வெளியாகவில்லை. இதனால் தேர்வு எழுதியவர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில், விடைக் குறிப்புகள் வரும் டிசம்பர் 27-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதிக்குள் வெளியாகும் என சிபிஎஸ்இ தரப்பில் கூறப்படுகிறது. தொடர்ந்து, 2019 ஜனவரி மாத இறுதியில் தேர்வு முடிவுகளை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தகுதித் தேர்வு எழுதியவர்கள் மேற்கண்ட விடைக்குறிப்புகளை சிபிஎஸ்இ இணைய தளமான ctet.nic.inp -யில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.