மே 3ம் தேதிக்குப் பிறகு அனைத்துத் தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) அறிவித்துள்ளது.
உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள கொரோனா வைரசின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகக் கடந்த மாதம் முதலே பள்ளி, கல்லூரிகளுக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஊரடங்கு காரணமாக யுபிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு மே மாதம் மூன்றும் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தற்போது மே மாதம் 3ம் தேதிக்குப் பிறகு அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த அட்டவணையில் மாற்றம் இல்லை எனவும், ஊரடங்கு உத்தரவால் மே 3-ம் தேதிக்கு முன்பு திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் அனைத்தும் ஜூன் மாதத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற மே 31ம் தேதி திட்டமிட்டபடி IAS, IPS, IFS, IRS சிவில் சர்விஸ் பணிகளுக்கு தேர்வு நடைபெறும் என யுபிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.