தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை வரும் மே மாதத்தில் பத்து நாட்களில் நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாகப் பள்ளி, கல்லூரி, தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டு மக்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, 12ம் வகுப்பு பொதுத்தேர்வைத் தவிர மற்ற அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனிடையே 1-ஆம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் எனத் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்ட கூட்டமைப்பின் சார்பில் அரசிற்குக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதனிடையே, தற்போது தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகே முடிவு செய்யப்படும். கொரோனா நோய்த்தொற்று நிலைமையைப் பொறுத்து பொதுத்தேர்வு குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் எனத் தெரிவித்தார்.
மேலும், அடுத்து வரும் மே மாதத்தில் பத்து நாட்களில் 10ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகவும், மாணவர்கள் பொதுத்தேர்வுக்குத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.