சென்னை: ஐஐடி நுழைவுத் தேர்வு எழுத பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கும் அதிர்ஷ்டம் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 4,600 மாணவர்களுக்கு இந்த ஐ.ஐ.டி. உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு தற்போது தொடங்கியுள்ளது.
ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர ஐஐடி ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த உயர்கல்வி நிறுவனங்களில் பெரும்பாலும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மட்டுமே சேர்ந்துவருகின்றனர். அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து வருவது மிகவும் குறைந்த அளவில் உள்ளது.
இந்தக் குறையைப் போக்க தமிழகத்திலுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு ஐஐடி நுழைவுத் தேர்வுப் பயிற்சியை தமிழக அரசு வழங்க முடிவு செய்தது. இதற்கான பயிற்சி சமீபத்தில் தொடங்கப்பட்டது.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாக படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க "டான்எக்ஸெல்' என்கிற திட்டம் தொடங்கப்பட்டது.
அதனடிப்படையில், 9-ஆம் வகுப்பில் சிறப்பாகப் படிக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வார இறுதி நாள்களில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒரு வகுப்புக்கு குறைந்தபட்சம் 60 மாணவர்கள் தேவை என்பதால் கல்வி மாவட்ட அளவில் இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டு 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் பிளஸ் 2 வகுப்புக்குச் செல்லும் வரை தொடர்ந்து பயிற்சி வழங்கப்படும். பிளஸ் 2 வகுப்பு முடித்த பிறகு உயர் கல்வி நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் அவர்கள் தயார்படுத்தப்படுவர்.