சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக சோதனை அடிப்படையில் தேர்வு முறையை மாற்றவும் இயக்ககம் முடிவு செய்துள்ளது. அதன்படி 10-ம் வகுப்புத் தேர்வுகளில் பாடத் திட்டம் மட்டுமல்லாமல் பாடத்திட்டத்துக்கு வெளியிலிருந்தும் கேள்விகளை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்துக்கு பள்ளி மற்றும் கல்வியாளர்களிடமிருந்து மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் இந்தத் தேர்வு முறை மாற்றம் படிப்படியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று பள்ளி நிர்வாகங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
மேலும் பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையில் மாற்றம் கொண்டு வராமல் புதிய தேர்வு முறையை அமல்படுத்துவது எந்தப் பலனையும் தராது என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில பள்ளிகள் அமைப்பின் பொதுச் செயலர் பி.பி. பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியதாவது:
பாடம் சொல்லித் தருவதை மாற்றுவதன் மூலம் இந்த தேர்வு முறை மாற்றமும் எளிதாகும். இதற்கான பயிற்சியை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அளிக்கவேண்டும்.
அப்போதுதான் பாடத் திட்டத்துக்கு வெளியே இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு மாணவர்களால் தேர்வில் பதில் அளிக்க முடியும். மாணவர்கள் சிந்தித்து விடை அளிக்கும் விதத்தில் இந்த கேள்விகள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதற்காக மாணவர்களை பள்ளிகள் தயார் செய்யவேண்டும் என்றார் அவர்.