சென்னை: கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.), பொது செயல்திறன் (சி.பி.டி.) தேர்வுகளில் சென்னை மாணவர் ஜான் பிரிட்டோ சாதித்து அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தார்.
சி.ஏ, சிபிடி தேர்வு
கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.), பொது செயல்திறன் (சி.பி.டி.) முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
நவம்பரில் நடந்தது
2015-ஆம் ஆண்டு நவம்பரில் நடத்தப்பட்ட சி.ஏ. தேர்வு, டிசம்பரில் நடத்தப்பட்ட சி.பி.டி. தேர்வு முடிவுகளை ஐ.சி.ஏ.ஐ. (இந்தியன் சார்டர்ட் அக்கவுண்டென்ட் நிறுவனம்) வெளியிட்டது.
2,440 பேர் தேர்வு
நாடு முழுவதும் இருந்து தேர்வு எழுதிய 42,469 பேரில் 2,440 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், குரூப்-1 தேர்வை எழுதிய 77,442 பேரில் 9,764 பேரும், குரூப்-2 தேர்வை எழுதிய 75,774 பேரில் 9,084 பேரும் தேர்ச்சி பெற்றனர். இதேபோல் சி.பி.டி. தேர்வு எழுதிய 99,077 பேரில் 34,129 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிரிட்டோவுக்கு 595
சி.ஏ. இறுதித் தேர்வில் சென்னையைச் சேர்ந்த மாணவர் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ 800-க்கு 595 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று, சாதனை படைத்துள்ளார்.
ஆந்திர மாணவர் 2-ம் இடம்
இவரைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலம், திருப்பதியைச் சேர்ந்த நகோலு மோகன் குமார் 572 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த அவினாஷ் சஞ்செட்டி 566 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளார்.
தேர்வு எழுதுவது எப்படி?
பள்ளிப் படிப்பை முடித்து நேரடியாக சி.ஏ. படிப்போர் சி.பி.டி. தேர்வை எழுத வேண்டும். இதில், தேர்ச்சி பெறுவோர் இடைநிலைத் தேர்வுகளான (ஐ.பி.சி.) குரூப்-1, குரூப்-2 தேர்வுகளை முடித்து, சி.ஏ. இறுதித் தேர்வை எழுதலாம்.
இடைநிலைத் தேர்வு
பட்டப் படிப்பை முடித்தோர் இடைநிலைத் தேர்வுகளை எழுதிமுடித்து, சி.ஏ. இறுதித் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.
முதல்முறையிலேயே வெற்றி
தேர்வில் வெற்றி பெற்றது குறித்து ஜான் பிரிட்டோ கூறியதாவது: நான் முதல்முறையாக இருபிரிவுகளில் தேர்வு எழுதினேன். முதல் முறையிலேயே வெற்றி பெற்று விட்டேன். அகில இந்திய அளவில் முதல் இடத்துக்கு வந்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.
ஜான் பிரிட்டோவின் தந்தையும் சி.ஏ.
என்னுடைய தந்தையும் ஒரு கணக்குத் தணிக்கையாளர்தான். என்னுடைய மூத்த சகோதரர் மருத்துவர்.
நிறுவனத்தில் சேர...
தற்போது சிஏ தேர்வில் வெற்றி பெற்றுள்ளதால் ஏதாவது ஒரு நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்ற நினைக்கிறேன். எந்த நிறுவனம் என்பதை நான் இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் அவர்.