சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 மற்றும் 11ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த வகுப்பிற்கான பாடங்களை மட்டுமே நடத்த வேண்டும். அதைவிட்டு வேறு பாடங்களை நடத்தினால் அந்த மாணவர்கள் அடுத்த தேர்வை எழுத அனுமதி கிடைக்காது என்று சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குக் கடந்த ஆண்டுகளில் அதற்குரிய பாடங்களை நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. அதாவது, 9-ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு 10-ஆம் வகுப்பு பாடங்களும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 12ம் வகுப்பு பாடங்களையும் நடத்துவதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் அந்த மாணவர்கள் பத்து மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுப்பார்கள் என்று பள்ளி நிர்வாகங்கள் கருதுகின்றன. இதனிடையே, இது தொடர்பாக சிபிஎஸ்இ நிர்வாகம் பள்ளிகளுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பாடங்கள்
சிபிஎஸ்இ சார்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மற்றும் வரையறுக்கப்பட்டுள்ள பாடங்களை மட்டுமே 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்த வேண்டும். அதைத் தவிர்த்து வேறு பாடங்களை நடத்தவோ, அல்லது அடுத்த வகுப்புக்கான பாடங்களை நடத்தினாலோ அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு சிபிஎஸ்இ அங்கீகரித்துள்ள பாடங்களை மட்டுமே மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதன்படி அந்தப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படும். அவர்கள் அந்தத் தேர்வுகளை எழுத தகுதியற்றவர்களாகக் கருதப்படுவர். மேலும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது அங்கீகாரம் ரத்து போன்ற நடவடிக்கை எடுக்கப்படும். சிபிஎஸ்இ அங்கீகாரம் வழங்கியுள்ள பாடங்கள் தொடர்பான பட்டியல் cbseacademic.nic.in / curriculum.html என்னும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளைத் தொடங்குவதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட பள்ளிகள் அந்தப் பாடங்களின் பட்டியலை மாணவர்களுக்குத் தெரிவித்து சரிபார்த்துக் கொள்வது அவசியம். அதன் பின்னரே பாடங்களை நடத்தத் தொடங்க வேண்டும்.