நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த சிபிஎஸ்இ 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் நடைபெற்ற சிபிஎஸ்இ 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வில் 31 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கடந்த ஏப்ரல் 3ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து, மே மாதம் இறுதிக்குள் இதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு மாநில பாடத்திட்ட தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியிடப்பட்டதால், மே 3வது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கலைக் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போய்விடும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க ஏதுவாக ஒரு மாதகாலத்திற்குள்ளேயே தேர்வு முடிவுகள் வெளியாகியிருப்பது மாணவ, மாணவிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை www.cbse.nic.in, www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.