அடுத்து வரும் கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வில், கணிதத் தேர்வை 2 தாள்களாக நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.
சிபிஎஸ்இ நிர்வாகம் சமீப காலமாக பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்விற்கான கட்டணங்களை சிபிஎஸ்இ நிர்வாகம் அதிரடியாக உயர்த்தியதால் நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது, அடுத்து வரும் கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வில், கணிதத் தேர்வை 2 தாள்களாக நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் 10-ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் 2020-இல் நடக்க உள்ளது. அதற்கான தற்காலிக தேர்வு அட்டவணையும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பத்தாம் வகுப்பிற்கான கணக்கு தேர்வை இரண்டு கட்டமாக நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. அதாவது கணக்கு பாடம் தாள் 1, தாள் 2 என நடத்தப்படும். கணக்கு தாள் 1-இல் அடிப்படை கணக்குகளும், தாள் 2-இல் தரமான கணக்குகளும் இடம் பெறலாம் என எதிர்ப்பாக்கப்படுகிறது.
10-ம் வகுப்பிற்கான கணக்கு பாடத்தில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் பிரிவைத் தெரிவிக்க தேர்வு விண்ணப்பத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும். அதை மாணவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இதுகுறித்தான மேலும் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.