சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி 2021 பிப்ரவரி மாதம் நடத்த சாத்தியமில்லை என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ர்ச் மாத இறுதி முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது ஒரு சில மாநிலங்களில் பாதிப்பு குறைந்துள்ள நிலையில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்தாலும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளைத் திறப்பதில் காலதாமதம் தொடர்ந்து வருகிறது.
இதனிடையே, தற்போது புதிய கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் மீண்டும் அச்சத்தின் பிடியில் உள்ளன. இந்த நிலையில், வழக்கமாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெறும் சிபிஎஸ்இ பாடத்திட்ட 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்விகள் நாடு முழுவதும் எழுந்துள்ளது.
இந்நிலையில், கொரொனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 2021 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறாது என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
மேலும், தேர்வு எப்போதும் நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும், 2021 பிப்ரவரிக்குப் பின்பு இந்தத் தேர்வு குறித்த முடிவுகள் எடுக்கப்படும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, தேர்வுகளை ரத்து செய்வதும், தேர்வுகள் நடத்தப்படாமலேயே மாணவர்களுக்குத் தேர்ச்சி அளிப்பதும் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சியை முழுமையாகப் பாதிக்கும். வேலை வாய்ப்புகளில் மாணவர்கள் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.