சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் தனித் தேர்வர்களாக தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள், இன்று (அக்டோபர் 25) முதல் நவம்பர் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல் தொழில் கல்வி பாடங்களுக்கான தேர்வுகளை பிப்ரவரியிலும், முக்கிய பாடங்களுக்கான தேர்வுகளை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களிலும் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. அதற்கான மாதிரி படிவங்கள், விவரங்களைத் தனது இணைய தளத்தில் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற 10, 12-வது பொதுத் தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்கள் 2019-ஆம் ஆண்டு நடக்க உள்ள பொதுத் தேர்வில் தனித் தேர்வர்களாக தேர்வெழுத இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இன்று (அக்டோபர் 25) முதல் துவங்கும் விண்ணப்பங்கள் வரவேற்பு நவம்பர் 17ம் தேதியுடன் நிறைவடையும். இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறும் மாணவர்கள் நவம்பர் 23ம் தேதி வரை அபராத கட்டணமாக ரூ.500 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
முதல் அபராத காலத்துக்குள் விண்ணப்பிக்கத் தவறும் மாணவர்கள் நவம்பர் 30ம் தேதி வரை அபராதத் தொகையாக ரூ.1000 செலுத்தியும் விண்ணப்பிக்கலாம். அதற்குப் பிறகும் கால நீட்டிப்பு டிசம்பர் 7ம் தேதி வரை செய்யப்படும். தேர்வுக் கட்டணம் குறித்த மேலும் விபரங்களை அறிய சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
நண்பர் வீட்டில் அழகானப் பெண் கதவைத் திறக்கிறார்! நீங்கள் என்ன செய்வீர்கள்? இன்டர்வியூ கேள்விகள்!