கொரோனா தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மேலும், மாநில பாடத்திட்டம், சிபிஎஸ்இ உள்ளிட்ட தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இதனிடையே, தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் 15-ம் தேதி வரையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சிபிஎஸ்இ பொதுத்தேர்வு கால அட்டவணை மே 18 அன்று வெளியிடப்படும் என்றும், சில தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மே 18 அன்று ரமேஷ் பொக்கிரியால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஜூலை 1-ம் தேதி பொதுத் தேர்வுகள் தொடங்குவதாக அறிவித்துள்ளார். அத்துடன் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுக்கான அட்டவணையையும் அவர் வெளியிட்டுள்ளார்.