அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் படித்து இன்னும் தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ள முன்னாள் மாணவர்களின் நலன் கருதி அரியர் தேர்வெழுத மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக் கழக பாடத்திட்டம் மற்றும் மறு மதிப்பீடு முறையில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கான அண்ணா பல்கலைக் கழகத்தின் ஆட்சிக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பல்கலைக்கழக பதிவாளர் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது
அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா டெக்னாலஜி, எம்ஐடி உள்ளிட்ட கல்லூரிகளில் மறு கூட்டல் செய்யும் விதத்தில் மாற்றப்பட்டுள்ள மறு மதிப்பீடு முறை, பல்கலைக்கழகத்துக்கு நிரந்தர பதிவாளரை நியமிப்பது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகள் மற்றும் உறுப்பு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் கட்டணம் அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காகத் தமிழக அரசின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் புதிய கட்டணம் அமலுக்கு வரும். மேலும், 10 ஆண்டுகளுக்கு முன் தேர்வெழுதி அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பழைய மாணவர்கள் அரியர் வைத்துள்ள பாடங்களை வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் எழுதலாம். இதுவே கடைசி வாய்ப்பாகும். இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்ற சுமார் 30,000 மாணவர்கள் பயனடைவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications












