அண்ணா பல்கலைக் கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் எம்பிஏ, எம்சிஏ, எம்இ உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கான தனி நுழைவுத் தேர்வை நடத்த அப்பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. நடப்பாண்டு முதல் இந்த புதிய நதிட்டமானது நடைமுறைப்படத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்பிஏ, எம்சிஏ, எம்.டெக், எம்.இ., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேர டான்செட் என்னும் பொது நுழைவுத் தேர்வு நடைபெற்று வந்தது. அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அளவில் கலந்தாய்வு நடைபெறும். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும், இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில், நடப்பாண்டில் டான்செட் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாவதற்கு முன்னதாக அண்ணா பல்கலைக்கழகம் கொள்கை முடிவு ஒன்றை எடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அதனைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக் கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் முதுநிலைப் படிப்புகள் அனைத்துக்கும் டான்செட் தேர்வுக்கு பதிலாக தனி நுழைவுத் தேர்வு நடத்துவது என திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.