அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவர்களின் தேர்வுத்தாள்கள் மறுமதிப்பீடு செய்வதில் பல ஆண்டுகளாக முறைகேடுகள் நடந்து வருவதாக பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் வந்த நிலையில் தற்போது அண்ணா பல்கலைக் கழகம் அதிரடியான திட்டம் ஒன்றை அறிவித்திருப்பது மாணவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தில் தேர்வுகள் மதிப்பீடு செய்வதில் பல்வேறு ஊழல் நடப்பதாக மாணவர்கள் மத்தியில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. குறிப்பாக, கடந்த ஆண்டு பொறியியல் மாணவர்களின் தேர்வுத் தாள்கள் மறுமதிப்பீடு செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, 60 மாணவர்களிடம் இதுகுறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறை முடிவு செய்து மாணவர்களுக்குச் சம்மன் அனுப்பியது.
90 ஆயிரம் மாணவர்களிடம் லஞ்சம்
இதனிடையே அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து அதில் தேர்ச்சி பெற்ற 90 ஆயிரம் மாணவர்களிடம் தலா ரூ.10 ஆயிரம் வீதம் லஞ்சம் பெற்று முறைகேட்டில் ஆசிரியர்கள் ஈடுபட்ட விவகாரம் சமீபத்தில் வெளியே தெரியவந்தது.
வழக்குப் பதிவு
இதனைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பேராசிரியை ஜி.வி.உமா மற்றும் திண்டிவனம் மண்டல அதிகாரிகளான உதவி பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமார் மற்றும் 7 உதவி பேராசிரியர்கள் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூ.400 கோடி லஞ்சம்
இதில், முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பேராசிரியை ஜி.வி.உமா, கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.400 கோடி வரையிலும் லஞ்சம் பெற்றிருப்பது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, உமா, விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பலரை இடைநீக்கம் செய்து பல்கலைக் கழக துணை வேந்தர் உத்தரவிட்டார்.
அதிரடி முடிவு
இந்நிலையில், தேர்வுத் தாள்களை மாணவர்களின் முன்னிலையில் மறுமதிப்பீடு செய்ய அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. மாணவர்களின் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல் புகார் எழுந்ததால் அண்ணா பல்கலைக் கழகம் இத்தனைய அதிரடி முடிவினை எடுத்துள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தில் அடுத்து வரும் தேர்வுகளில் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த கல்லூரிகளுக்கு ?
கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, எம்.ஐ.டி ஆகிய மூன்று பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தால் அந்தந்த மாணவர்கள் முன்னிலையிலேயே விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யப்படும். இந்தப் புதிய முறை அப்பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் 471 இணைப்புக் கல்லூரிகளுக்குப் பொருந்தாது.
மறுமதிப்பீடு செய்யும் குழு
மறுமதிப்பீடு செய்யும் குழுவில் பாடம் கற்பித்தவர், அனுபவம் வாய்ந்த பேராசிரியர், துறைத்தலைவர் ஆகிய மூவர் இருப்பர். மாணவர் முன்னிலையில் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யும் போது, மாணவரின் சந்தேகம் தீர்வதுடன், ஏன் மதிப்பெண் குறைவாக வழங்கப்பட்டது உள்ளிட்ட வினாக்களுக்குக் குழுவில் உள்ளவர்கள் பதிலளிப்பர்.
காலநேரமும் நீட்டிப்பு
மறுமதிப்பீட்டில் விடைத்தாள் திருத்தும் காலநேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பு 3 மணி நேரத்தில் முப்பது விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டன. இப்போது 4 மணி நேரத்தில் 25 விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்படும். விடைத்தாள்களைப் பொறுமையாகப் படித்துப் பார்த்துத் திருத்துவதற்காகக் கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளது.