கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் நடைபெறவுள்ள பருவத் தேர்வில் மாணவர்களுக்கு அதிரடியான சலுகையை அப்பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு
கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்துச் சேவைகளும் முடக்கப்பட்டன. குறிப்பாக, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆன்லைன் வழியிலான வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
பள்ளித் தேர்வுகளில் மாற்றம்
கொரோனா நோயினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க 9ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் முதலில் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, நோயின் தாக்கம் அதிகரித்த நிலையில் 12ம் வகுப்பைத் தவிர்த்து மற்ற வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக் கழக வகுப்புகள்
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால் கல்லூரிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கல்லூரி, பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் வழியாகவே நடத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என அப்பல்கலைக்கழக நிர்வாகமும் அறிவித்துள்ளது.
பருவத் தேர்வு தேதிகள் மாற்றம்
தொடர்ந்து, பொறியியல் படிப்புகளுக்கான இரண்டாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ஏப்ரல் முதல் மே மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த கல்வி ஆண்டிற்கான பருவத் தேர்வு குறித்தான அறிவிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலை அதிரடி
அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் அனைத்து மாணவர்களும் ஆன்லைன் முறையிலேயே தேர்வு நடைபெறும் என்றும், மேலும், மாணவர்களுக்கு புத்தகத்தை திறந்து வைத்து, பார்த்தபடியே தேர்வுகளை எழுதலாம் என்றும் அனுமதி வழங்கியுள்ளது.
இதுவே முதல் முறை
வழக்கமாக, பருவத் தேர்வுகளைத் தவிர்த்து பிற தேர்வுகளில், இதற்கு முன்பு புத்தகத்தை திறந்து தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பருவத் தேர்வில் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது இதுவே, முதல் முறை ஆகும்.
பல்கலைக் கழக மாணவர்களுக்கு மட்டுமே சலுகை
அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரடியாக படித்து வரும் மாணவர்கள் மட்டுமே இச்சலுகை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற இதர பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் இதே நடைமுறையில் தேர்வுகளை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications












