இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வு எழுத, நாடு முழுவதும் 23.82 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக என்டிஏ (தேசிய தேர்வு முகமை) தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்-NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வானது, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 2024-25 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 5-ம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு, கடந்த பிப்ரவரி 9-ல் தொடங்கி மார்ச் 16-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இதையடுத்து இந்தத் தேர்வு எழுத நாடு முழுவதும் 23 லட்சத்து 81,833 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதில் 10 லட்சத்து 18,593 மாணவர்கள், 13 லட்சத்து 63,216 மாணவிகள், 24 திருநங்கைகளும் அடங்குவர். மாநிலங்கள் வரிசையில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 3 லட்சத்து 39,125 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஒரு லட்சத்து 55,216 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக என்டிஏ தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளை விட நீட் தேர்வெழுத அதிக அளவிலான மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். 2022-ம் ஆண்டில் 18 லட்சத்து 72,343 பேரும், 2023-ம் ஆண்டில் 20 லட்சத்து 87,449 பேரும் தேர்வெழுத விண்ணப்பித்தனர். அதை விட கூடுதலாக நடப்பாண்டில் 23 லட்சத்து 81,833 மாணவர்கள் நீட் தேர்வுக்காக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications












