சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் இன்று காலை பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியது. இந்த ஆண்டு 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்.
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியது. இத் தேர்வு வரும் 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.
6 ஆயிரத்து 256 பள்ளிகளில் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வை 3 லட்சத்து 90 ஆயிரத்து 753 மாணவர்களும், 4 லட்சத்து 52 ஆயிரத்து 311 மாணவிகளும் என மொத்தம் 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 பேர் தேர்வு எழுதியுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்வு எழுதியுள்ளனர்.
சென்னை புழல் சிறையில் உள்ள கைதிகள் 77 பேரும் இந்த தேர்வை எழுதுகிறார்கள். அவர்கள் சிறையில் இருந்தே எழுதுகிறார்கள்.
காலை 10 மணிக்கு தேர்வுகள் தொடங்கின. முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை படிக்கவும், அடுத்த 5 நிமிடங்கள் விடைத்தாளில் தேர்வு எண் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்யவும் ஒதுக்கப்பட்டது.
மாணவ, மாணவியர் சிரமம் இன்றி தேர்வு எழுத மையங்களுக்கு தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதி செய்யப்பட்டிருந்தது. இம்முறை 42 ஆயிரத்து 693 பேர் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதினர்.
4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் 250க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தது.
மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு தேர்தல் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணிநேரம் அளிக்கப்பட்டது.