கொரோனா தொற்றின் காரணமாகத் தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் துணைத் தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு 10, 11ம் வகுப்பு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வில் பெற்ற மதிப்பெண் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.
மேலும், இதில் மதிப்பெண் குறைவாக இருப்பதாகக் கருதும் மாணவர்கள் துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மதிப்பெண்கள் குறைவாக உள்ளதாக கருதிய மாணவர்களும், மே 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வெழுத விண்ணப்பிக்கத் தவறிய தனித் தேர்வர்களும் துணைத் தேர்வில் பங்கேற்றனர்.
கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற்று முடிந்த இத்தேர்வின் முடிவுகள் தற்போது www.dge.tn.gov.in என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.