11ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 1-இல் தொடங்கி 29-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றன. இதனைத்தொடர்ந்து, 12ட்ம வகுப்பிற்கான பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்து, தேர்வு முடிவுகளும் கடந்த 19-இல் வெளியிடப்பட்டன. தொடர்ந்து, 10ம் வகுப்பிற்கான விடைத்தாள் திருத்தும் பணிகளும் கடந்த வாரம் முடிந்துவிட்டது.
இதனிடையே, 11ம் வகுப்பிற்கான விடைத்தாள் திருத்தும் பணிகளில் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அப்பணிகளும் முடிவுற்ற நிலையில், மதிப்பெண்கள் பதிவேற்றம் மற்றும் தற்காலிக சான்றிதழ் தயாரிக்கும் பணிகளை தீவிரப்படுத்த தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே அறிவித்தபடி 11ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் வரும் மே 8ம் தேதியன்று வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.