தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தவறி, வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சிறப்பு துணைப் பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதில், விண்ணப்பிக்க விருப்பும் தனித் தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் வரும் ஏப்ரல் 8ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரையில் வரவேற்கப்படுகிறது.
2019-2020-ஆம் கல்வியாண்டு முதல் செப்டம்பர், அக்டோபர் பருவ துணைத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களுக்கு ஜூன், ஜூலையில் நடைபெறும் சிறப்பு துணைப் பொதுத் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தனித்தேர்வர்கள் அவரவர் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்படும் தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். இத்தேர்விற்கான கட்டணம் மற்றும் ஆன்லைன் பதிவு உள்ளிட்டு மொத்தம் 175 ரூபாய் செலுத்த வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் மீண்டும் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 24 ஆகிய தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள், சிறப்புத் துணைத் தேர்வு குறித்த கூடுதல் விவரங்களை அறிய www.dge.tn.gov.in என்னும் இணையதள முகவரியில் இடம்பெற்றுள்ளன.