சென்னை: எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி உள்ளது. ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வை 11,827 பள்ளிகளிலிருந்து 10.72 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 3,298 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு தேர்வினை 5.40 லட்சம் மாணவர்களும், 5.32 லட்சம் மாணவிகளும் எழுதுகின்றனர். கடந்த ஆண்டை விட 33,816 மாணவ, மாணவியர் இந்த ஆண்டு கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர்.
இந்தத் தேர்வை தமிழ் வழியில் 7 லட்சத்து 30 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். தனித்தேர்வர்களாக 50,429 பேர் எழுதுகின்றனர்.
சென்னையில் 57 ஆயிரம் மாணவர்கள்
சென்னையில் 578 பள்ளிகளிலிருந்து 57,344 மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். புதுச்சேரியில் 291 பள்ளிகளிலிருந்து 19,559 மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.
241 சிறைவாசிகள்
இந்தத் தேர்வை 241 சிறைவாசிகளும் எழுதுகின்றனர். பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் 33 பேரும், கோவை மத்தியச் சிறையில் 97 பேரும், புழல் மத்தியச் சிறையில் 111 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.
பறக்கும் படையினர்
பத்தாம் வகுப்புத் தேர்வுப் பணிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இந்தத் தேர்வுக்காக 5,200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
22 பக்கங்கள்
தமிழ், ஆங்கிலம், பிற மொழிப்பாடங்களுக்கு 22 பக்கங்கள் கொண்ட கோடிட்ட விடைத்தாள் புத்தகங்கள் வழங்கப்படும். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு 30 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் புத்தகங்கள் வழங்கப்படும். இதில் சமூக அறிவியல் பாடத்துக்கான விடைத்தாள் புத்தகத்தில் முதல் நான்கு பக்கங்களில் 4 வரைபடங்கள் இடம்பெற்றிருக்கும்.
9.15 மணிக்கு தொடக்கம்
பிளஸ் 2 தேர்வு வழக்கமாக காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. ஆனால், பத்தாம் வகுப்புத் தேர்வு கடந்த ஆண்டு வழக்கமான நேரத்துக்குப் பதில் 45 நிமிஷங்கள் முன்னதாக 9.15 மணிக்குத் தொடங்கப்பட்டது.
வெயிலை தடுக்க
கோடை வெயிலின் தாக்கத்தால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க முன்கூட்டியே தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டும் பத்தாம் வகுப்புத் தேர்வு காலை 9.15 மணிக்குத் தொடங்கியது. முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்ததாக 5 நிமிஷங்கள் விடைத்தாள் விவரங்களைப் பூர்ததி செய்யவும் வழங்கப்படும். காலை 9.30 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.