ஏராளமான கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், ஜாம்பவான்களை உருவாக்கி சாதனை படைத்த சென்னை பல்கலைக்கழகம் 175-வது ஆண்டை நோக்கி வெற்றி நடைபெற்று வருகிறது.
ஏராளமான இணைப்புக் கல்லூரிகளைப் பெற்றுள்ள இந்த சென்னை பல்கலைக்கழகம்
ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கி சமூகத்துக்கு சேவை செய்ய அனுப்பிக் கொண்டிருக்கிறது.
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் உள்ள மிகப் பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது. இது 1851-ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவிலேயே உள்ள மிகவும் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று என்ற சிறப்புப் பெருமையைப் பெற்றுள்ளது. லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இது, 5 செப்டம்பர் 1857-ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டு பெருமை பெற்றதாக அமைந்துள்ளது.
இருப்பினும் இப்பல்கலைக்கழகம், மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டதாக செயல்படுகிறது.
தொடக்கத்தில் இந்த பல்கலை.யில் மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலமாக தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. இப்பொழுது சட்டம், பொறியியல், மருத்துவம் ஆகிய பிரிவுகள் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டு விட்டன. தற்போது கலை, அறிவியல், வணிகவியல் உள்ளிட்ட பிரிவுகள் இங்கு இயங்கி வருகின்றன. மேலும் தன்னாட்சிக் கல்லூரிகளை முதல் முறையாகத் தொடங்கியது சென்னை பல்கலைக்கழகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில்16-ம் நூற்றாண்டின் இறுதியில் கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய மூன்று முக்கிய துறைமுகங்கள் கண்டறியப்பட்டன. இம்மூன்று நகரங்களிலும் நிர்வாகம், வர்த்தகம் ஆகியவற்றுக்காக நவீன அமைப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் அப்போது இருந்த சமஸ்தானங்களுக்கு ஏற்பட்டது.
அப்போது பிரிட்டிஷ் அரசின் லார்ட் ஜான் எல்பின்ஸ்டனிடம் (Lord John Elphinston) பொதுமக்கள் அளித்த பொதுமனுக்குழு சென்னைப் பல்கலைக்கழகம் அமைக்கக் காரணமாக அமைந்தது. ஜனவரி 1840-ல் ஜார்ஜ் நார்டன் தலைமையில் பல்கலைக்கழக வாரியம் அமைக்கப்பட்டது. இதுவே பிரெசிடென்சி கல்லூரி உருவாகக் காரணமாக அமைந்து அது முதலில் உருவானது. 1857-ல் பல்கலைக்கழகம் உருவானது. 1857-ல் மெட்ராஸ் பல்கலைக்கழக மருத்துவப் பயிற்சி அளிக்க அங்கிகாரம் பெற்றது.
அதன் பிறகு 14 வருடம் கழித்து 1854-ல் சார்லஸ் உட் எழுதிய கல்விக்குறிப்பின் பயனாக ஒரு சீரான கல்விக் கொள்கை ஒன்றை அமைத்து 1857-ல் சட்டம் இயற்றிச் சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. 1923-ல் சென்னைப் பல்கலைக்கழக எல்லைகள் வடக்கே ஒடிசா, ஆந்திரா, ஹைதராபாத், மேற்கே மங்களூர், மைசூர், கேரளா, திருவனந்தபுரம் எனப் பரந்து விரிந்திருந்தது.
சென்னைப் பல்கலைக்கழகம் மும்பை மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 1857-ம் ஆண்டு நிறுவப்பட்டது. 2000-ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு NAAC மூலம் முதல் முறையாக அங்கீகாரம் மற்றும் "5 நட்சத்திர அந்தஸ்து" வழங்கப்பட்டது. தனது 150-ஆவது வருடத்தைக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் 2008-ஆம் ஆண்டு கொண்டாடியது. இன்னும் 8 ஆண்டுகளில் 175-வது ஆண்டு விழாவை பல்கலைக்கழகம் கொண்டாடவுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் மைசூர் பல்கலைக்கழகம் (1916),
உசுமானியா பல்கலைக்கழகம் (1918), ஆந்திரப் பல்கலைக்கழகம் (1926),
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (1929), திருவாங்கூர் பல்கலை (1937), உத்கல் பல்கலைக்கழகம் (1943), திருவேங்கடவன் பல்கலைக்கழகம் (1954), மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (1966), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (1971),
அண்ணா பல்கலைக்கழகம் (1978), பாரதிதாசன் பல்கலைக்கழகம் (1982),
பாரதியார் பல்கலைக்கழகம் (1982), பெரியார் பல்கலைக்கழகம் (1997),
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (1997), திருவள்ளுவர் பல்கலைக்கழகம் (2002) போன்ற பல்கலைக்கழகங்கள் உருவாயின.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தது குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் காதம்பி மீனாட்சி இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் புகழ்பெற்ற க. அ. நீலகண்ட சாத்திரியிடம் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி ஆவார். இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான மரு.முத்துலட்சுமி ரெட்டி இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் பயின்றவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஜாம்பவான்களை உருவாக்கிய பெருமை உடையது இந்தப் பல்கலைக்கழகம்.
முன்னாள் மாணவர்கள்
இந்த பல்கலைக்கழகத்தில்தான் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி, சர் சி.வி. இராமன், குடியரசுத் தலைவர்களாக இருந்த சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன், வி. வி. கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி, ஆர். வெங்கட்ராமன், ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோரும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பதஞ்சலி சாஸ்திரி, க சுப்பா ராவ் உள்ளிட்டோரும், பேரறிஞர்களான ரா. பி. சேதுப்பிள்ளை, சீர்காழி இரா. அரங்கநாதன், கணித மேதை ராமானுஜம், பேராசிரியர் த செயராமன் ( ஏ.வி.சி கல்லூரி மயிலாடுதுறை .தலைமை ஒருங்கிணைப்பாளர் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு) உள்ளிட்டோரும் படித்துள்ளனர்.
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் 121 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள சில பிரபலமான கல்லூரிகளாக லயோலா கல்லூரி, சென்னை, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி, சென்னை,
எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை, டிஜி வைஷ்ணவ் கல்லூரி, சென்னை, பச்சையப்பா கல்லூரி, சென்னை
பிரசிடென்சி கல்லூரி, சென்னை, எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி, சென்னை, மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரி, சென்னை, ராணி மேரி கல்லூரி, சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, சென்னை,
பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி, பாரதி கலைக் கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, லோகநாத நாராயணசாமி கலைக் கல்லூரி, டி ஜி வைஷ்ணவ் கல்லூரி, எம் ஒ பி வைஷ்ணவ் கல்லூரி உள்ளிட்டவை உள்ளன.
சென்னை பல்கலைக்கழகமானது ஏராளமான இணைப்புக் கல்லூரிகளைப் பெற்றுள்ளதோடு, முதுநிலை வகுப்புகள், பிஎச்.டி. வகுப்புகளையும் நடத்தி ஆண்டுதோறும் ஏராளமான பட்டதாரிகளை உருவாக்கி வருகிறது.
மேலும் சென்னை பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் தொலைதூர பட்டப்படிப்புப் பிரிவு மிகவும் பிரசித்தமாகும். வீட்டில் இருக்கும் பெண்கள், வேலைக்குச் செல்லும் ஆண்கள் என ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இந்த தொலைதூரக் கல்வி மூலம் பயின்று பட்டதாரிகளாகின்றனர்.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் இந்த பல்கலைக்கழகத்தில் பயின்று உயர்கல்வி, பிஎச்.டி என உயரத்துக்குச் சென்று கொண்டே இருக்கின்றனர்.
சென்னை பல்கலைக்கழகம் அதன் மாணவர்களுக்காக தொலைதூரக் கல்வி வசதியின் கீழ் MBA, BBA, MCom, MSc, Certification, BCA & MCA, மற்றும் பிற UG மற்றும் PG படிப்புகளை வழங்கி வருகிறது.
உதவித்தொகை
மேலும் நன்கு படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகைகளை சென்னை பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. அதுபோக சென்னை பல்கலைக்கழகம் சார்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு "தேசிய வெளிநாட்டு உதவித்தொகை" வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், முதுகலை பட்டப்படிப்பில் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மற்றும் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 6 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் மாணவர்களுக்கு 20 வகையிலான உதவித்தொகைகள் (6 உதவித்தொகைகள் மாணவிர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது) வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இது தவிர, சென்னைப் பல்கலைக்கழகம் எஸ்சி/எஸ்டி பிரிவின் தகுதியான மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகையையும் வழங்கி வருகிறது.

பல்வேறு வசதிகள்:
சென்னை பல்கலைக்கழகமானது மிகப்பெரிய நூலக வசதியைப் பெற்றுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள், 10,030 ஆய்வறிக்கைகள், 260 இதழ்கள், 100 சிடி ரோம்கள், 4 ஆயிரத்துக்கும் அதிகமான இதழ்கள் இருக்கின்றன.
மேலும், சென்னை பல்கலைக்கழகத்தில் ஸ்குவாஷ், சதுரங்கம் மற்றும் கால்பந்து போன்ற உள்ளரங்க மற்றும் திறந்தவெளி விளையாட்டுகளுக்கான வசதிகள் உள்ளன. பெண்கள் மற்றும் சிறுவர்கள் இருவரும் பல மாநில மற்றும் தேசிய போட்டிகளில் சென்னை பல்கலைக்கழக அணி சார்பில் பங்கேற்று பெருமை சேர்த்துள்ளனர்.
இதுபோக பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கென பிரத்யேக வசதி மையங்கள் உள்ளன. இந்த வசதி மையங்களை மாணவர்கள் கல்லூரி இடைவேளையின் போது பயன்படுத்திக்கொள்ளலாம்.
டிப்ளமோ
இதுபோக ஏராளமான டிப்ளமோ படிப்புகளையும் சென்னை பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. சென்னை பல்கலைக்கழகம் புவியியல் தரவு பகுப்பாய்வுகளில் பிஜி டிப்ளமோ, தொல்லியல் துறையில் பிஜி டிப்ளமோ, டிப்ளமோ இன் மொழிகள், டிப்ளமோ இன் சைபர் கிரைம் மற்றும் இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி, டிப்ளமோ இன் டிராவல் அண்ட் டூரிஸம் மேனேஜ்மென்ட் மற்றும் பல சிறப்புப் படிப்புகளில் டிப்ளமோ படிப்புகளை மாணவ, மாணவிகளுக்காக வழங்குகிறது.
வேலைவாய்ப்புப் பிரிவு
பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவச் செல்வங்களுக்காக வேலைவாய்ப்புப் பிரிவு ஒன்றை பல்கலைக்கழக நிர்வாகம் தொடங்கி சிறப்பான முறையில் நடத்தி வருகிறது. இந்த வேலைவாய்ப்புப் பிரிவி சார்பில் சென்னை பல்கலைக்கழகம் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் இறுதி ஆண்டில் வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்பு வசதிகளை வழங்குகிறது. இதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகம் உள்ளது, அது வளாகத்தில் மற்றும் வளாகத்திற்கு வெளியே வேலை வாய்ப்பு முகாம்களை ஏற்பாடு செய்கிறது.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர்மட்ட நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களைச் சேர்ப்பதற்காக வளாகத்துக்கு வந்து மாணவர்களை பணியில் அமர்த்துகின்றனர். படிப்புடன் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரும் சென்னை பல்கலைக்கழக வேலைவாய்ப்புப் பிரிவு மாணவச் செல்வங்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
திருக்குறள் தனி பாடம்
சென்னை பல்கலைக்கழகத்தில் திருக்குறள் தனி பாடமாக அறிமுகம் செய்யப்படும் என 2021-ல் அறிவிக்கப்பட்டது. 'தொழில் தர்மத்துக்கான திருக்குறள்' என்ற பெயரில் ஒரு பாடமாகத் திருக்குறள் அறிமுகம் செய்யப்படுகிறது. இத்தகவலை அப்போதைய சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி உறுதி செய்தார்.
இணையதள முகவரி: https://unom.ac.in/
முகவரி: Navalar Nagar, Chepauk, Triplicane, Chennai, Tamil Nadu 600005
தொலைபேசி: 044 2539 9422


Click it and Unblock the Notifications












