கலை அறிவியல் கல்லூரிகளில் தேவைப்படும் துறைகளுக்கு நான்கு வகுப்புப் பிரிவுகளை தொடங்கிக் கொள்ளலாம் என சென்னைப் பல்கலைக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த சில வருடங்களாகவே பொறியியல் மீதான மோகம் குறைந்து கலை அறிவியல் துறைகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு, 2018 ஆம் ஆண்டிலும் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்தது. சென்னையில், சென்னை மாநிலக் கல்லூரி, காயிதே மில்லத் மகளிர் கல்லூரி போன்ற கல்லூரிகளில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 500 முதல் 1000 விண்ணப்பங்கள் கூடுதலாக இந்த ஆண்டு பெறப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மாணவர்களிடையே, கலை அறிவியல் மீதாக ஆர்வம் அதிகரித்து வருவதால், கூடுதலாக 20 சதவிகித இடங்களில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள தமிழகம் முழுவதும் உள்ள அரசுக் கல்லூரிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், கலை-அறிவியல் படிப்புகள் மீதான மாணவர்கள் ஆர்வமும், விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், இதற்கான நிரந்தரத் தீர்வாக தேவைப்படும் துறைகளில் கூடுதல் வகுப்புத் துறைகளை தொடங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழகம், கலை-அறிவியல் கல்லூரிகள் தேவைப்படும் துறைகளில் 4 வகுப்புப் பிரிவுகளைத் தொடங்கிக் கொள்ள அனுமதிப்பது என முடிவு செய்துள்ளது.
இதுவரை, ஒவ்வொரு படிப்பிலும் அதிகபட்சமாக 3 வகுப்புப் பிரிவுகளைத் தொடங்குவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுவந்தது. இப்போது கூடுதலாக மேலும் ஒரு பிரிவைத் தொடங்கிக் கொள்ள அனுமதிப்பது என பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications












