யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் 1,688 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் விரைவில் பரிசீலனை செய்யப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அதைத் தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறும் என்றும் இந்திய மருத்துவத் துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு, தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் பி.என்.ஒய்.எஸ். என்னும் இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு 600-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இதில், அரசுக் கல்லூரியில் 60 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு 385 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 192 இடங்களும் அடங்கும்.
இந்த நிலையில், மேற்குறிப்பிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்ப விநியோகம், கடந்த 1-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற்றது.
www.tnhealth.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களின் வாயிலாகவும், யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் நேரடியாகவும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பங்களைப் பெற்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவற்றில் பெரும்பாலானோர் ஆன்-லைன் மூலமாகவே விண்ணப்பங்களைத் தரவிறக்கம் செய்துள்ளனர். இந்நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான அவகாசம் கடந்த திங்களுடன் (ஜூலை 22) நிறைவடைந்தது.
தற்போது, இந்திய மருத்துவத் துறை அதிகாரிகளின் தகவல்படி, மொத்தம் 1,688 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் இந்த முறை வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் எனவும், கலந்தாய்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.