கால்நடை மருத்துவ படிப்பிற்கான சிறப்பு பிரிவு கவுன்சிலிங் சென்னையில் இன்று நடைபெற்று வரும் நிலையில், தரவரிசையில் இடம்பெற்றுள்ள மாணவர்களிடம் இருந்து சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில், நான்கு அரசு கால்நடை மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்வி நிறுவனங்களில் கால்நடை சார்ந்த மருத்துவம், பராமரிப்பு, உணவு, பால்வளம் உள்ளிட்ட படிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது, மேற்குறிப்பிட்ட கால்நடை பல்கலைக் கழகத்தில் 2020 - 21ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து, பொதுப்பிரிவு மற்றும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in என்னும் பல்கலையின் இணையதளங்களில், ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளது.
தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்கள் வரும் டிசம்பர் 24ம் தேதி காலை, 10 முதல், 28ம் தேதி மாலை, 6 மணி வரையில் பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்தவர்களில் தகுதியான மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான ஆணை டிசம்பர் 30ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த ஆணையைப் பதிவிறக்கம் செய்து 2021 ஜனவரி 13 மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.