முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதியன்று தொடங்க உள்ள நிலையில் இன்று (ஆகஸ்ட் 22) அதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இக்கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
இத்தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
கலந்தாய்வின் முதல் நாளில் அகில இந்திய அளவில் நடத்தப்படும் பட்டதாரி நுண்ணறி தேர்வில் (கேட்) தகுதி பெற்றவர்கள் மற்றும் தமிழக அளவிலான பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) தகுதிபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். டான்செட் தேர்வில் தகுதி பெற்ற பிற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 28 முதல் 30-ஆம் தேதி வரையில் கலந்தாய்வு நடத்தப்படும்.
அதனைத் தொடர்ந்து காலியாக உள்ள அருந்ததியினருக்கான ஒதுக்கீட்டு இடங்களில் எஸ்.சி. பிரிவு மாணவர்களைச் சேர்ப்பதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 30-ஆம் தேதியன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.