முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு என நடத்தப்பட்ட முதற்கட்ட கவுன்சிலிங்கில் முதல் நாளிலேயே 314 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் முதல் கட்ட கவுன்சிலிங் நடைபெறுகிறது.
திங்களன்று நடைபெற்ற கவுன்சிலிங்கில் மாற்று திறனாளிகளுக்கான மாணவர் சேர்க்கையில், 24 இடங்கள் நிரம்பியுள்ளன. பொதுப்பிரிவில் 290 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் நாளிலேயே மொத்தம் 314 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும் முதற்கட்ட கவுன்சிலிங் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு உள்ள 1,758 இடங்களில் 50 சதவிகிதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. மீதி உள்ள 879 இடங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் இட ஒதுக்கீடு அளிக்கும் 235 இடங்கள் ஆகியவை சேர்த்து மொத்தம் 1,114 இடங்களுக்கு கவுன்சிலிங் நடக்கும்.