எல்.எல்.பி என்னும் மூன்றாண்டு சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் செப்டம்பர் 3-ஆம் தேதியன்று தொடங்கப்பட உள்ளது.
அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள் மற்றும் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கான மூன்றாண்டு சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில், 5 ஆண்டுகள் சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிந்த நிலையில், தற்போது மூன்றாண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான கட்-ஆப் மதிப்பெண் மற்றும் கலந்தாய்வு தேதி குறித்த விவரங்களைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. அதில், செப்டம்பர் 3-ஆம் தேதியன்று கலந்தாய்வு தொடங்கி 11-ஆம் தேதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்கத் தகுதியுள்ள மாணவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் விரைவுத் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாத, தகுதி வாய்ந்த மாணவர்களும் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.