சென்னையில் உள்ள எம்ஜிஆர் அரசு திரைப்பட, தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் பல்வேறு பயிற்சிகள், படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. இங்கு பயிற்றுவிக்கப்படும் இளங்கலை காட்சிக்கலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கலாம் என்று தமிழக அரசு சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை www.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து மாணவர்கள் டவுன்லோடு செய்து விண்ணப்பிக்கலாம்.
சென்னையிலுள்ள எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனமானது, முன்பு அடையார் திரைப்பட நிறுவனம் என்று அழைக்கப்பட்டது. இது ஆசியாவின் முதல் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனமாகும்.
1945-ம் ஆண்டில் அடையாறு திரைப்பட நிறுவனமாக நிறுவப்பட்டது. இது இந்தியாவின் முன்னோடி திரைப்பட நிறுவனங்களில் ஒன்றாக மிகச்சிறந்த முறையில் பயிற்சிகளை அளித்து வருகிறது. இது சென்னை அடையாறு அடுத்த தரமணியில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தமிழ்நாடு மாநில அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் கீழ் மிகச் சிறப்பான முறையில் இயங்கி வருகிறது.
திரைக்கதை மற்றும் இயக்கம், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் ஒலி பொறியியல், திரைப்பட எடிட்டிங் மற்றும் திரைப்பட செயலாக்கம் மற்றும் அரசாங்கத்தின் செயல்பாடுகள் போன்ற பயிற்சிகள் இங்கு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 14 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும், டிப்ளமோ படிப்புகள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலால் (AICTE) அங்கீகரிக்கப்பட்டு, சான்றிதழ்கள் தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வித் துறையால் வழங்கப்படுகிறது.
இதனிடையே, நிறுவனத்தில் வழங்கும் படிப்புகள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழக அரசின் செய்தித் துறையின்கீழ், சென்னையில் அமைந்துள்ள எம்ஜிஆர் அரசு திரைப்பட, தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மிகச்சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. தமிழ்த் திரைப்படம், தொலைக்காட்சி துறைகளில் மிக சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள், இயக்குநர்களை இந்நிறுவனம் உருவாக்கி அவர்களை செழிப்படைச் செய்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 2016-17 கல்வி ஆண்டு முதல், ஜெயலலிதா இசை, கவின்கலை பல்கலைக்கழகத்துடன் இந்த பயிற்சி நிறுவனம் இணைக்கப்பட்டு, நாட்டிலேயே முதல்முறையாக திரைப்பட தொழில்நுட்பங்களுக்கென, இளங்கலை காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும் 4 ஆண்டு பட்டப் படிப்புகளை இந்த நிறுவனம் மிகச்சிறப்பான முறையில் பயிற்றுவித்து வருகிறது.
இதனிடையே, இங்கு 2024-25 கல்வி ஆண்டில் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளங்கலை காட்சிக்கலையில் ஒளிப்பதிவு (Cinematography), எண்மிய இடைநிலை (Digital Intermediate), ஒலிப்பதிவு (Audiography), இயக்கம், திரைக்கதை எழுதுதல் (Direction and Screenplay Writing), படத்தொகுப்பு (Film Editing), உயிர்ப்பூட்டல், காட்சிப்பயன் (Animation and Visual Effects) ஆகிய 6 பிரிவுகளில் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கலை ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகள் இப்படிப்புகளில் சேர்ந்து பயனடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 2-ம் தேதி முதல் மே 20-ம் தேதி வரை www.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து இதற்கான படிவத்தை பதிவிறக்கம் செய்து மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன், 'முதல்வர், தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்பட, தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், சிஐடி வளாகம், தரமணி, சென்னை-600 113' என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் மே 27-ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
அதற்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. விண்ணப்பங்களை பெறவோ, சமர்ப்பிக்கவோ மாணவர்கள் நேரில் வர வேண்டாம்.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












