சென்னையில் உள்ள உயர்கல்வி நிறுவனமான ஐஐடி-யில், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையில், விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு வரும் கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது.
சென்னை ஐஐடி என்று அழைக்கப்படும், இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை (Indian Institute of Technology Madras- இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ்) தென்னிந்தியாவில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியாகும். இது மத்திய அரசால் நடத்தப்படும் ஓர் உயர்கல்வி நிறுவனமாகும்.
இந்திய அரசினால் தேசிய இன்றியமையாக் கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தியாவின் தலைசிறந்த கல்விக்கூடங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது. 1959ஆம் ஆண்டு அப்போதைய மேற்கு ஜெர்மனி அரசின் பணஉதவி மற்றும் நுட்ப உதவியுடன் இது நிறுவப்பட்டது. இந்திய நாடாளுமன்றத்தின் ஆணையால் நிறுவப்பட்ட மற்றும் நாட்டின் இன்றியமையாத கல்விக்கழகங்கள் என அறிவிக்கப்பட்ட, பொறியியல் மற்றும் நுட்பக்கல்வியில் சிறப்பான உயர்கல்வி நோக்கம் கொண்ட பதினைந்து தன்னாட்சி வழங்கப்பட்ட தொழில்நுட்ப கழகங்களில் மூன்றாவதாக நிறுவப்பட்டது.
சென்னை ஐஐடி-யானது, 2.5 சதுர கிலோமீட்டர் (620 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைந்துள்ளது. இது முற்காலத்தில் கிண்டி தேசியபூங்கா இருந்த வளாகத்தில் அமைந்திருந்தது. முற்றிலும் கல்விக்கூட வளாகத்தில் தங்கிப் படிக்கும் கல்விக்கூடமாகிய இக்கழகத்தில் ஏறத்தாழ 360 ஆசிரியர்கள்,4000 மாணவர்கள் மற்றும் 1,250 நிர்வாகத் துணை அலுவலர்கள் உள்ளனர். 1961-ம் ஆண்டில் நாடாளுமன்ற ஆணைப் பெற்ற நாளிலிருந்து ஐஐடி சென்னை, நாட்டின் கற்பித்தல்,ஆய்வு மற்றும் தொழில் அறிவுரைத் துறைகளில் முதன்மை மையமாக வளர்ந்துள்ளது.

ஐஐடி சென்னை, வளாகத்தின் பெரும்பகுதி பாதுகாக்கப்பட்ட காடுகளால் சூழப்பட்டுள்ளது. மேலும் அருகில் இருக்கும் கிண்டி தேசிய பூங்காவால் பொலிவுபெறும் இவ்வளாகத்தைப் புள்ளி மான்கள், கலைமான்கள், புல்வாய் மான்கள், குரங்குகள், சில வகை ஆமைகள் மற்றும் சில வனவிலங்குகள் வாழ்விடமாகக் கொண்டுள்ளன. இவ்வளாகத்தில் அமைந்திருக்கும் ஓர் எழில்மிகு ஏரி, அதிக மழை நீரைச் சேகரிக்கும் பொருட்டு 1988 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் தூர்வாரப்பட்டது.
விளையாட்டுப் பிரிவு
இந்த சிறப்பு வாய்ந்த சென்னை உயர்கல்வி நிறுவனமான ஐஐடி-யில்தான், தற்போது இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையில், விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு வரும் கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி கூறியதாவது:
விளையாட்டு வீரர்களுக்கு தற்போது அற்புதமான வாய்ப்பை சென்னை ஐஐடி வழங்கவுள்ளது. பிளஸ் 2 முடித்து, சென்னை ஐ.ஐ.டி.,யில் இன்ஜினியரிங் படிக்க விரும்பும் மாணவர்கள், விளையாட்டு வீரர்களாக இருந்தால், அவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு முறை, வரும் கல்வி ஆண்டில் இருந்து அறிமுகமாகிறது. அதாவது 2024-2025-ம் கல்வியாண்டில் சேரும் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும்.
அறிமுகம்
நாட்டில் உள்ள ஐஐடி-களில் முதன்முறையாக, சென்னை ஐஐடி-யில் தான் விளையாட்டு பிரிவு வீரர்களுக்கு இன்ஜினியரிங்கில் ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்படுகிறது. பிளஸ் 2 மாணவர்கள், தங்களின் விளையாட்டு அனுபவங்களுடன், அதற்கேற்ற தொழில்நுட்பத்தையும் சேர்த்து படித்தால், வரும் காலத்தில் விளையாட்டு மேம்பாட்டுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை..
இதை கருத்தில் கொண்டுதான் தற்போது, விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு முதல் முறையாக அமல்படுத்தப்படுகிறது.
இந்த ஒதுக்கீட்டை பெற விரும்பும் மாணவர்கள், ஜே.இ.இ., மற்றும் ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம், 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருத்தல் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர் சேர்க்கை
இந்த கல்வித்தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு, தனியாக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அதிலுள்ள முன்னணி தர வரிசை அடிப்படையில், மாணவர் சேர்க்கை வழங்கப்படும். எனவே, விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஐஐடி-யில் எளிதில் சீட் கிடைத்துவிடும்.
மேம்பாட்டு ஆணையம்
தேசிய அளவிலான விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அங்கீகரித்த விளையாட்டுகளில், தேசிய, சர்வதேச அளவில் பங்கேற்றவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு, விளையாட்டு பிரிவுக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடும். இதைத் தொடர்ந்து வரும் கல்வி ஆண்டு முதல், விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு அமலுக்கு வரும். இதற்கான ஆணைகளை மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
விளையாட்டுப் பிரிவின் கீழ் இளநிலை பட்டப்படிப்பின் ஒவ்வொரு பாடப்பிரிவிலும், தலா 2 இடங்கள் ஒதுக்கப்படும். அதில், ஒரு இடம் மாணவிகளுக்கு வழங்கப்படும். இந்த சேர்க்கை நடைமுறை, ஐ.ஐ.டி.யின் ஒருங்கிணைந்த ஆன்லைன் முறையில் இல்லாமல், சென்னை ஐ.ஐ.டி வழியே தனியாக நடத்தப்படும். விளையாட்டு பிரிவு மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு, தங்களது எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள முடியும்.
இவ்வாறு சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி கூறினார்.
புதிய மையம் தொடக்கம்
மேலும், ஐஐடி-யில் விளையாட்டுப் பிரிவுக்கு உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து ஐ.ஐ.டி.,யின் பெருநிறுவன தொடர்பு துறை பேராசிரியர் மகேஷ் பஞ்ச்குலா விளக்கியுள்ளார். இது விளையாட்டு வீரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்றும் பேராசிரியர் மகேஷ் பஞ்ச்குலா கூறியுள்ளார்.
விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு குறித்து, ஐஐடி பெருநிறுவன தொடர்பு துறை பேராசிரியர் மகேஷ் பஞ்ச்குலா
கூறியதாவது:
விளையாட்டு வீரர்களின் வசதிக்காக விளையாட்டு அறிவியல் ஆராய்ச்சி மையம் என்ற புதிய மையம், சென்னை ஐஐடி-யில் தொடங்கப்படுகிறது. விளையாட்டு வீரர்கள், விளையாட்டு போட்டிகள், விளையாட்டு உபகரணம் தயாரிப்பு நிறுவனங்கள், விளையாட்டு வீரர்களுக்கான உடல்நலன் பேணுதல் போன்ற அனைத்துக்கும் தேவையான தொழில்நுட்பம் மற்றும் புள்ளி விபரங்களை, இந்த மையத்தின் வழியே ஆராய்ச்சி செய்ய உள்ளோம்.
மேலும், சென்னை ஐஐடி-யில் புதிதாக சேர உள்ள விளையாட்டு வீரர்களுக்கு, விளையாட்டு போட்டிகளில் தங்களை மேம்படுத்துவதற்கான அனைத்து உதவிகளும், பயிற்சிகளும் வழங்கப்படும். விளையாட்டு துறைகளில், தொழில்நுட்பத்தை ஏற்படுத்தவும் இந்த மாணவர்களுக்கு, உரிய பயிற்சி அளிக்கப்படும். இதனால் விளையாட்டு வீரர்கள் தாங்கள் இணைந்த விளையாட்டில் மேம்பட்டு தங்களது எதிர்கால விளையாட்டு வாழ்க்கையை சிறப்பாக வடிவமைத்துக் கொள்ள இயலும்.
இவ்வாறு பேராசிரியர் மகேஷ் பஞ்ச்குலா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications












